வெள்ளி, 22 ஜனவரி, 2016

திருக்குறள் பலூன்


 திருக்குறள் பலூன்

சிறியவர் முதல் பெரியவர் வரை பலூன் என்றால் அனைவருக்கும் விருப்பம்தான். பல வண்ணங்களில் பல வடிவங்களில் இருக்கும் இது அனைவரையும் கவர்கிறது. குறள் பலூன் என்றால் என்னவாக இருக்கும்? பலூனில் ஒரு குறள் எழுதியிருப்பார்களா? என்று நாம் நினைக்கலாம். அதுதான் இல்லை. சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூனில் வள்ளுவர் எழுதிய 1330 குறளும்  தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடனும் வள்ளுவரின் படத்துடன் இடம் பெறும்.

உருவான வீதம்

  A.R. செல்வ சரவணா மற்றும் பெனெடிக் இருவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் இந்த குறள் பலூன். இவர்கள் அழகிய பலூன்களை வடிவமைப்பதில் வல்லவர்கள். இவர்களின் வித்தியாசமான முயற்சி தான் இந்த குறள் பலூன். இந்த பலூனை கூடிய விரைவில் உலகெங்கும் பறக்க விட உள்ளனர். மிகப்பெரிய வெப்ப காற்று பலூனில் நம் புகைப்படமும பயணம் செய்ய முடியும் என்றால் அந்த சந்தோசத்தை விவரிக்க முடியாது. அதற்காக நாம் செய்ய வேண்டியது 7500 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் அடிப்படை நோக்கம் திருக்குறளை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே.
திருக்குறளின் சிறப்பு
 ஏன் ஒரு தமிழ் நூலை உலகறியச் செய்ய வேண்டும்? என நினைக்கலாம். இந்த உலகிற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களையும் இரண்டடியில் கூறிய வள்ளுவரின் திறமே இதற்கு காரணம். வேறு எந்த மொழியிலும் இத்தனை சிறப்புடைய நூல் இல்லை. எக்காலத்திற்கும் பொருந்தாத திருக்குறள் முக்காலத்தையும் உணரத்துவதாக உள்ளது.

திருக்குறளை படிக்க அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க வேண்டும் - காந்தி

தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நம்மால் திருக்குறளின் சுவையை முழுமையாக உணர முடியாது. இதுவே திருக்குறளின் தனித்தன்மை ஆகும். உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டை திரும்பிப் பார்க்கும் விதமாக இந்த குறள் பலூன் பயணம் இருக்கும் என நம்பப்படுகிறது.


வியாழன், 21 ஜனவரி, 2016

தலைவியின் வருத்தம்


                            மருதம்


           


           நோம் என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே
           புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
           கட்கு இன் புது மலர் முட் பயந்தா அங்கு,
           இனிய செய்த நம் காதலர்
           இன்னார் செய்தல் நோம், என் நெஞ்சே!
                          -அள்ளுர் நன்முல்லையார்(பா.-202)
                   
திணை
      மருதம்
 துறை
     வாயிலாகப் புக்கத் தோழிக்கு தலைமகள் வாயில் மறுத்த்து
துறை விளக்கம்
         பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாகவந்த தோழியைநோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும்ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்என்று தலைவி கூறியது.
பாடல் விளக்கம்
        தோழி,என் நெஞ்சு வருந்தும் முல்லை நிலத்தில் அமைந்துள்ள சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது புது மலர் முன்னர் கண்ணுக்குத் தோன்றும் பின்னர் தான் அதன் முள் தெரியும். அதுபோல முன்னர் இனியது செய்த என் தலைவன் இப்போழுது இன்னாமை செய்யும் போது என் நெஞ்சு வருந்துகிறது என்று தலைவி கூறுகிறாள்.

தலைவியின் மென்மை



                              முல்லை





  
     முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
     கழுவுறு கலிங்கம், கழாஅது உடீஇ
     குவளை உண்கண் குய்ப்புகை கமழுத்
     தான் துழந்து அட்டதீம் புளிப் பாகர்
     இனிதுஎனக் கணவன் உண்டலின்
     நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
                                -கூடலூர் கிழார்(பா.-167)
திணை       
       முல்லை
துறை
       கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.


துறை விளக்கம்

   



     திருமணமான மகளின் குடும்ப  நிலையை பற்றி செவிலித்தாய் நற்றாய்க்கு உரைப்பது.

பாடல் விளக்கம்
       முற்றிய தயிரினை  பிசைந்த போது காந்தள் மலரை போன்ற மெல்லிய விரலை கொண்ட தலைவியின் கைகள் சிவந்தன, மேலும் தாளிப்பின் போது வரும் புகையானது குவளை போன்ற அவளது  கண்ணின் மையை கலைத்தது, தானே தூழாவி சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிது என உண்ணும் போது தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது. இவ்வாறு தலைவியின் குடும்ப நிலையைப் பற்றி செவிலித்தாய் நற்றாய்க்கு உரைக்கிறாள்.
                    
          

புதன், 20 ஜனவரி, 2016

எதிர் வீட்டு தேவதை .



பதினோராம் வகுப்பில்தான்

பார்த்தேன் அவளை

கல்லூரி நான் செல்கையில்

கையசைத்து சிரிப்பாள்….


புத்தக சந்தேகமென

பார்க்க வருவாள்

புரிய வைத்தபின்

புன்னகைத்து செல்வாள்


முத்தம் பெறுவதட்காக

முதல்முறை சொன்னேன்

மனமுடித்து கொள்வேனென்று

முத்தமும் கொடுத்தாள்..


பெண் பார்க்கும்

படலமும் தொடங்கிற்று

பாவமாய் சுற்றினாள்

பேதை பாவை


சாகாலத்தி சண்டையிட

சற்றும் நேரமில்லை

சட்டென்று எல் கே ஜி

சேரவேண்டும் என்பதினால்...!!!


ஆயிரம் கால் மண்டபம்



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?




மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.


தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும்,திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்கவேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும்.



செவ்வாய், 19 ஜனவரி, 2016

தலைவி கூந்தலின் நறுமணம்


                   
          எட்டுத்தொகையில் ஒன்று குறுந்தொகை.நான்கு அடி சிறுமையும் எட்டடிப் பெருமையும் உடையது.இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.இந்நூல் 401 செய்யுட்களை உடையது. எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துக் கூறும் வெண்பா இந்நூலை நல்ல குறுந்தொகை எனச் சிறப்பித்துக் கூறுகிறது.இந்நூலுக்கு பேராசிரியர்ரும்,நச்சினார்க்கினியரும் உரைவகுத்திருந்தனர்.
                   குறிஞ்சி
        கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
        காமம் செப்பாது கண்டது மொழிமோ;
        பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்
        செறி எயிற்று அரிவை கூந்தலின்
        நறியவும் உளவோ,நீ அறியும் பூவே?
                                -இறையனார்(பா.-2)
               
திணை
       குறிஞ்சி
துறை
           இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண் இடையீடுபட்டு நின்ற தலைமகன் நாணின் நீக்குதற் பொருட்டு,மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி,தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது.
துறை விளக்கம்
           தலைவன் தலைவியின் நாணத்தை நீக்குதற் பொருட்டு அவளை சிரிக்க வைக்க முயலுகிறான்.
பாடல் விளக்கம்
               தேனை ஆராயந்து உண்ணுகின்ற அழகிய சிறகினை உடைய தும்பியே நீ என் நிலத்து வண்டாதலின் எனக்கு சாதகமாக கூறாமல் நீ அறிந்த உண்மையை கூறுவாயாக என்னோடு பழகிய பழக்கத்தால் பொருந்திய காதலையும்,மயில் போன்ற மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய இத்தலைவியின் கூந்தலை போல நறுமணமுடைய பூக்கள் வேறு உள்ளனவோ?

வணிகவியல் கருத்தரங்கம்



திங்கள், 18 ஜனவரி, 2016

சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு;



இந்தியப் பொருளாதாரம் மற்றும்  உங்கள் குறிக்கோள்;

முன்னுரை;


         அன்புடையீருக்கு வணக்கம்.(18.01.2016)  இன்று எங்கள் கல்லூரியில் வணிகவியல் துறையை சேர்ந்த மாணவிகளுக்கு கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து  N.SENTHIL KUMAR  உதவிப் பேராசிரியர்  (வணிகவியல் துறை)  அவர்கள் சிறப்பு சொற்பொழி ஆற்றினார்.இந்தியப் பொருளாதாரம் மற்றும் உங்கள் குறிக்கோள் குறித்து  பேசினார்.

இந்தியப் பொருளாதாரம் ;

         இந்தியப் பொருளாதாரம் எதனால் பின்தங்கியுள்ளது.அதிலிருந்து வெளியேற மாணவிகளாகிய இளைய தலைமுறையின் முயற்சி மற்றும் தனி நபர் வருமானம் உயர்வு மற்றும்  இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாகவும் இறக்குமதி குறைவாக இருப்பதும்  மேலும்  சிலவற்றை பகிர்ந்தார்.கல்வி முறையை மாற்றியமைப்பதும்  அதாவது இன்றை கல்வி பழமையானது எனவே  மாணவர்கள் அதை மட்டுமே படித்துப் பட்டம் பெறுகின்றன.தனது பாடப் புத்தகத்தை தாண்டி நிறைய விவஷசங்களை கற்க வேண்டும் என்றும் .உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை அருமையாக எடுத்துரைத்தார்.


குறிக்கோள்;

          பழிப்பேச்சு  பேசும் உதடுகறள் பேசிக்கொண்டு தான் இருக்கும்.நமது  கடமையை முழு முயற்சியுடன்  செய்து  முடிக்க வேண்டும் என்று அற்புதமாக கூறினார்.மேலும்  ஒரு  தகவலை பரிமாற்றம் செய்வது  பேச்சு மூலமாக இல்லாமல் எப்படி செய்து முடிப்பது என்பதையும் ஒரு வேளையை எப்படி உள்வாங்கி மற்றும்  விருப்பத்தோடு செய்வது பற்றியும் விளக்கினார்.நாம் இது வரை ஒருவர் கட்டாயமாக ஒரு குறிகோள் இருந்தால் தான் அதை அடைய முடியும் என்று கேட்டு இருப்போம் ஆனால் இன்று இந்த வகுப்பு மூலம் 4 குறிக்கோள் இருந்தார் கட்டாயம் ஏதோ ஒன்றை அடைய முடியும் என்றும் இதனால் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று கூறினார்.

விளையாட்டு மூலம் வகுப்பு;

         எங்கள் மாணவுகளுக்கு இதனை விளையாட்டு மூலம் அவர்களை ஈடுப்படுத்தி அருமையாக புரிய வைத்தார்.





முடிவுரை;

         இன்றை சூழலில் மாணவர்களால் இயன்றால் மட்டும் தான் இந்தியாவை மாற்ற இயலும் என்ற வகையில் அமைந்தது.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மையே.எண்ணங்களை உயர்வாக வையுங்கள் அது மலையை விட உயர்வாக இருந்தாலும் தவறில்லை.தோல்விகளை கண்டு மனம் தளராமல் அந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.ஏனென்றால் தோல்வுகளே வெற்றிக்கு ஏணிப் படி.முதலில்  நாம்  நம்முடைய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் அதாவது  சுயமரியாதை.நாம் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்பதை விட  சாதித்தோம் நாட்டுக்கு  உண்மையான குடிமகனாய் இருந்தோம் என்பதே சிறப்பு.இந்த  வகுப்பு முழுமையாக பயனாக அமைந்தது.எங்கள்  கல்லூரி முதல்வர்  கார்த்திகேயன் ஐயா,துறைத் தலைவர் வே.ராதிகா அம்மா மற்றும் வகுப்பு பொறுப்பாளர்  செல்வி அம்மா அனைவருக்கும் நன்றிகள் பல.இந்த வகுப்பை ஏற்படுத்திக் கொடுத்தற்கு..  


ஞாயிறு, 17 ஜனவரி, 2016

உழவு தொழில்நுட்பம் வரமா? சாபமா?



முன்னுரை;

பழங்காலத்தோடு ஒப்பிடுகையில் இன்றைய உழவு முறையானது முற்றிலும் வேறுபட்டது. எளிமையானது, சுலபமானது மற்றும் ஆபத்தானது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நெல் உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பார்ப்போம்.

அவசர உலகம்;

நம் கையில் கடிகாரமா?

கடிகாரத்தின் கையில் நாமா?   

என்று குழம்பும் வகையில் காலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் விரைவாக பார்த்துவிட்டு விரைவாகவே சென்றுவிடுகிறோம். அக்கால மக்கள் எல்லாம் நூறு வயது வரை வாழ்ந்தனர். நாமோ சில காலங்களில் நோய்வாய்பட்டு இறந்து விடுகிறோம். இதற்கு காரணம் நம் உணவு முறைகளே என்பது நமக்கு புரிவதில்லை. அக்காலத்தில் ஒரு வருடம் விளைந்த பயிர் இன்று மூன்று மாதத்தில் விளைகிறது. இது சாதகமான நிலை என நிலைக்கலாம். ஆனால் இது பத்துமாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை மூன்று மாதத்தில் பிறப்பதற்கு சமம். இதனால் உடலுக்கு தீங்கே  விளைகிறது.

வரமா? சாபமா?

ஏர்க்கலப்பையை வைத்து உழுது, உழவர் சேற்றில் இறங்கி மிதித்து நிலத்தை சமன்செய்து, தகுதி வாய்ந்த விதையை தேர்ந்தெடுத்து தூவினர். ஆனால் இன்றோ அவர்கள் பார்த்து பார்த்து செய்த வேலைகள் கருவிகள் மூலம் எளிதில் செய்யப்பட்டது. அன்றோ நாற்றுநடும் போது அவர்கள் பாடிய நாற்றுபுறப் பாடல்கள், இன்று யாரும் அறிந்திடாத பொக்கிஷம் ஆகிவிட்டது. அவர்கள் உழவை நேசித்த விதமும், உழவில் அவர்களுக்கு இருந்த அர்ப்பணிக்கு உணர்வும், அவர்கள் பாடிய நாட்டுப்புற பாடல்களும் நமக்கு தெரியாமல் போய்விட்டது. நம் நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலை நம் முன்னோர்கள் செய்த விதத்தை மறக்க வைத்த தொழில்நுட்பம் வரமா? சாபமா? என்று தெரியவில்லை. நம் வேலையை எளிதாக்கினாலும் நம் பண்பாட்டை மறக்கச் செய்தது.

நீரின்றி அமையாது உழவு;

விளைச்சல் பெருக முக்கிய ஆதாரமாக அமைவது நீர்தான். அத்தகைய நீர் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும், சுத்தமானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று வயலுக்கு பாய்ச்சப்படும் நீர் எவ்வாறு இருக்கிறது? மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட அசுத்தமான நீராக உள்ளது. ஆறுகள் எல்லாம் மனிதனின் செயல்பாட்டால் அசுத்தமாக உள்ளது. அசுத்தமான நீரை வயலுக்கு பாய்ச்சுவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது, நெற்கதிர் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நெற்கதிரை உட்கொள்ளும் போது நமக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

உயிர்கொள்ளும் உரம்;

பழந்தமிழர்கள் உரமாக இலை, தழை, மற்றும் விலங்குகளின் கழிவுகளைப் பயன்படுத்தினர். இதனால் விளைச்சல் பெருகியதோடு மட்டுமல்லாமல் சத்தானதாகவும் இருந்தது. ஆனால் இன்று செயற்கை உரங்களை பயன்படுத்துகின்றனர். இவைகளால் உடலுக்கு பெருந்தீங்கு விளைகிறது. மேலும் பயிர் பாதுகாப்பு என்னும் பெயரில் பயிர்களில் பூச்சிக் கொல்லிகளை அடிக்கின்றனர். இவை பூச்சிகளுக்கு உடனடி விஷமாகவும், மனிதர்களுக்கு நீண்ட நாள் விஷமாகவும் அமைகிறது. பூச்சிகளால் உண்ண முடியாத விஷத்தைத் தான் நாம் உணவு என உட்கொள்கிறோம். இவ்வாறு தொடர்ந்து பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி வந்தால் மண் வளம் பாதிக்கப்பட்டு விலை நிலம் பாலைவனமாக மாறிவிடும். அதன்பின் பசியை மறக்க மாத்திரையை பயன்படுத்த வேண்டி வரும்.

தொழில்நுட்ப வளர்ச்சி;

தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவசர உணவு என்னும் பெயரில் எமனை நாமே அழைக்கிறோம். அனைத்து வகையான உணவு பொருளிலிலும் கலப்படம். அரிசியிலும் பிளாஸ்டிக் அரிசியைக் கண்டுபிடித்துவிட்டனர். வளர்ச்சி என்னும் பெயரில் அதிக அளவு செயற்கையைப் பயன்படுத்துவதால் இயற்கை எல்லாம் அழிந்து கொண்டே வருகிறது.

உணவே மருந்து என்பது மாறி மருந்தில் தான் உணவு என்றாகிவிட்டது.

இந்த நிலை மாறினால் மட்டுமே நோயற்ற வாழ்வை நம்மால் வாழ முடியும். அயல்நாடுகளில் எல்லாம் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் விவசாயம் செய்கின்றனர். கட்டாயம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் கடமை. ஏனென்றால் அவர்களுக்கு விளை நிலங்கள் இல்லை. அதனால் மாடியில் விவசாயம் செய்கின்றனர். ஆனால் விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் கொடுமை  நம் நாட்டில் மட்டுமே நடக்கிறது.

முடிவுரை;

மேற்கூறியவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும். நம் நாட்டை வளமுடையதாக மாற்ற போராட வேண்டும்.
மாற்றங்களில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பர். உழவுக்கு மீண்டும் உயிரூட்ட வேண்டியது இளைஞர்களாகிய நமது கடமையாகும்.