வியாழன், 2 மார்ச், 2017

பண பரிவர்த்தனைக்கு கட்டணம்..


4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் - தனியார் வங்கிகள்.




நாட்டில் உயர்பணமான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொது மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானார்கள். தங்களின் அன்றாட தேவைகளுக்காக பொது மக்கள் பணம் எடுக்க முடியாமல் வங்கிகள் முன்பும், ஏ.டி.எம்-கள் முன்பும் குவிந்த வண்ணம் இருந்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு ஏ.டி.எம் மையங்களில் 5 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை இருந்தது.

உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாகவும், பொது மக்களின் வசதிக்காக கடந்த 4 மாதங்களாக எந்த ஏ.டி.எம் மையங்களிலும் பணம் எடுப்பதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

இந்நிலையில் பண மதிப்பிழப்பு பிரச்சனை ஆனது தற்போது மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் குறைந்தபட்ச அளவு கட்டணத்தை மீண்டும் வசூலிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி ஒரு மாதத்திற்கு ஒரு தனிநபர் தனது கணக்கில் 4 முறை மட்டுமே இலவசமாக பணத்தை வங்கிகளில் வைப்பு வைக்கலாம் அல்லது பணத்தை எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

அதற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஒவ்வொரு கணக்குக்கும் குறைந்த பட்ச தொகை வசூலிக்கப்பட உள்ளது. 4வது முறைக்கு மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும் பணம் வசூலிக்கப்படும். 150 ரூபாய் வரை வசூலிக்கபடும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த முறை இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன.

சேமிப்பு கணக்கு, சம்பள கணக்கு வைத்துள்ளவர்களும் 4 முறைக்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




2 கருத்துகள்:

  1. எல்லா விதத்திலும் கட்டணம் வசூலிப்பது தான் இவர்களுக்கு வழக்கம்...

    கட்டணத்திற்கு மேல் சேவை வரி வேறு விதிப்பார்கள்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தகைய கட்டணத்தை வசூலித்தும் நம் நாட்டின் கடன் அளவில் எந்த மாற்றமும் இல்லையே ஐயா.

      தங்களது வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      நீக்கு